பரபரப்பான ஒன்றில் மக்களின் அவசரம் தலைதூக்கியிருக்கும்போது, அதில் ஆதாயத்தை அலசிப் பிடிக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. சல்லடையாக இருந்து மக்களை ஏமாற்றும் வித்தைகளில் கைதேர்ந்தவர்களாகவும் பொறுப்பற்ற உற்பத்தியாளர்களாகவும் செயல்படுகின்றனர் என்பது அம்பலமாகியிருக்கிறது,
பொதுவாகவே இன்றைய அவசியத்தேவைகள் இரண்டு. முகக்கவசம், கைகழுவும் திரவம். இந்த இரண்டின் பயன்பாட்டு அவசியத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் புரிதலில் மூழ்கிக்கிடக்கும் நேரத்தில், மக்களின் அறியாமையை வணிகமாக்கும் மாய வித்தைகள் ஒருபக்கம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன என்பதை கவனிப்பார் யார்?
சீனாவில் இருந்து முகக்கவசங்கள் வந்திறங்கியபோது, அதில் தொற்று இருக்கிறது என்ற செய்தி வந்தது. பின்னர், அது பற்றிய கருத்துகள் முடங்கிவிட்டன. செய்திகள் முடங்கிவிடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று வதந்தி, மற்றொன்று உண்மை வராமல் தடுத்தல். (வணிக ஏய்ப்பு) இப்படியாகத்தான் இருக்கும்.
சுகாதாரப்புரட்சி ஒருபுறம், சுகாதார மிரட்சி மறுபுறம் . இந்த இரண்டுக்கும் நடுவே மக்கள். எதை நம்புவது. நம்பகத் தன்மை இருப்பதை உணர்த்துகின்றவர் யார்?
உண்மையும் போலியும் ஒரே வீட்டில் வாழ்கின்றன. இதில் உண்மைத் தன்மையைக் கண்டறியும் திறனில் மக்கள் இல்லை. மிக அவசரமாக ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டியிருப்பதால் மாறுபாடு தெரிவதில்லை. இதற்கு யார் பொறுப்பு?
முகக்கவசம் இல்லாமல் முக்கிய இடங்களில் நுழைய முடியாது என்கிறார்கள். திரவம் பயன்படுத்தாமல் உள்ளே நுழையக்கூடாது என்கிறார்கள். எல்லாம் சரி. முக்கிய இடங்களில் பயன்படுத்தப்படும் திரவங்கள் பாதுகாப்பானது அல்ல என்றால், அதை அறிவது எப்படி? மக்கள் இதையெல்லாம் தெரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டுமென்றால் காலம் ஒத்துழைக்காது.
முகக்கவசங்கள் ஒரு பொருட்டாக இப்போது இல்லை. ஆனால், திரவம் என்று வரும்போது ஆபத்து பாக்கெட்டில் இருக்கும் பர்ஸ் போலவே இருக்கிறது.
ஆல்காஹால் உள்ள திரவமே பாதுகாப்பனது என்றால், இன்றுவரை அனாமதேயங்கள் விற்பனையில் இருப்பதாகவே தெரிகின்றன. இதற்கான சோதனை, தீர்வுதான் என்ன?
போலிகள், கொரோனாவை விட ஆபத்தானது. ஆதலால் கொரோனா பரப்புவோர் பட்டியலில் போலி உற்பத்தியாளர்களும் கைது செய்யப்படவேண்டும். அப்பவி மக்களை ஏமாற்றாதீர்!