அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் போலீஸ் காவலில் இறந்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடைகள் சேதப்படுத்தப்பட்டு கார்கள் எரியூட்டப்பட்டு போராட்டங்கள் தீவிரமாகிவருகின்றன. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசுகின்றனர்.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்தில் சம்மந்தப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் தொடர்பாக வெளியான காணொளியில் வெள்ளையினத்தை சேர்ந்த முன்னாள் காவலர் டெரிக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில் தன் கால்களை வைத்து பல நிமிடங்கள் நசுக்குவது தெரிகிறது. அவர் மூச்சுவிடமுடியவில்லை என்று கதறுகிறார்.
ஜார்ஜ் இறந்தபோது அங்கே இருந்த மற்ற போலீஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் காவலில் கருப்பின அமெரிக்கர்கள் கொல்லப்படுவது தொடர்பான கோபத்தை இந்த நிகழ்வு மீண்டும் கிளறியுள்ளது.
இந்த போராட்டங்கள் பல ஆண்டுகளாக நீடிக்கும் சமூக, பொருளாதார பாகுபாட்டை பிரதிபலிக்கின்றன என்று கருதுவோரும் உண்டு.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்காவின் 30 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சனிக்கிழமை அன்று பெரும்பாலும் அமைதிப் போராட்டமாக இருந்தது, பிறகு வன்முறையாக உருப்பெற்றது. போராட்டங்களால் அதிகம் பாதித்த நகரம் லாஸ் ஏஞ்சலீஸ். போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் விரட்டி அடித்தனர்.