பினாங்கு மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பினாங்கு கொடிமலை கேபிள் கார் திட்டத்திற்கு நிதி வழங்காமல் முடக்கி இருக்கும் மத்திய அரசங்கத்தின் நடவடிக்கை அரசியல் பழிதீர்க்கும் செயலாகும் என்று பினாங்கு அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் உட்பட பொது மக்கள் அதிருப்தியை வெளிக் கொணர்ந்தனர்.
பினாங்கு மாநில வளர்ச்சியிலும் மலேசிய சுற்றுலாத்துறைக்கும் மேம்பாடை கொண்டு வரும் மக்கள் திட்டம், இந்த கேபள் கார். இத்திட்டத்திற்குத் தேவையான 10 கோடி வெள்ளி நிதியை வழங்க முந்தைய அரசாங்கம் ஒப்புதல் வழங்கி இருந்தது. ஆனால், இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் டான்ஸ்ரீ முஹிடின் அரசாங்கம் நிதி தர மறுப்பது சிறுபிள்ளைத்தனமான அரசியல்.
அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த பினாங்கு மாநில முதலமைச்சர் சௌவ் கொன் இயோ இதற்கு முன் இருந்த நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம், பினாங்கு மாநில அரசாங்கத்தின் கொடி மலை கேபிள் கார் திட்டதுக்கான நிதியாக 10 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது, ஆனால், அதனை இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் முடக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவலை கூறியிருந்தார்.
இதன் தொடர்பாக கடுமையான கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவித்த பினாங்கு மாநில அரசு சாரா அமைப்பின் தலைவர்கள், அரசியல் பழிவாங்கும் செயலை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நாட்டில் கோவிட்-19 உதவி நிதியாக கோடி கோடியாய் வாரி வழங்கும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அரசு, பினாங்கு மாநில அரசாங்கத் திட்டத்திற்கு வெறும் 10 கோடி வெள்ளி நிதியை வழங்க முடியாதா?
மத்திய அசராங்கத்தின் நிதி முடக்கச் செயலால், பினாங்கு கொடிமலை மேம்பாட்டுத் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பை கொண்டுவரும் என்று சௌவ் கொன் இயோ அண்மையில் கவலை தெரிவித்தார். பெரிக்காத்தான் நேஷனல், கோவிட்-19 நிதி காரணமாக இழந்துள்ள பொருளாதார சரிவை மேம்படுத்தும் நடவடிக்கைக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், மாநில அரசாங்கத்தின் மக்களுக்கான நலத் திட்டத்தை பேண வேண்டியதும் மத்திய அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும். குறைந்த பட்சம் பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதற்கு முன்னர் மாநில அரசுடன் பேச்சு வார்த்தையாவது நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
பினாங்கு மாநிலத்திற்கு பொதுப் போக்குவரத்து மேம்பாடு அவசியமான ஒன்று. அதேவேளையில் புதிய கேபிள் கார் திட்டத்தில் வழி மாநில பொருளாதாரம் வளர்ச்சியடைந்து உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று அவர்கள் விவரித்தனர். முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் பினாங்கு கொடிமலையில் கேபள் கார் அமைப்பு திட்டத்துக்காக, பினாங்கு அரசாங்கத்துக்கு 2020 நிதியறிக்கையில் 10 கோடி வெள்ளி நிதி ஒதுக்கியுள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.