மதுபோதையில் வாகனமோட்டிய குற்றத்திற்காக பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசால் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்ற அதிரடி பரிசோதனைகளில் நால்வரும் சிக்கினர். பரிசோதித்துப் பார்த்ததில் அவர்கள் மது அருந்தியது தெரிய வந்துள்ளது.
அதே சமயம் 280 மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு பல்வேறு சாலைக் குற்றங்களுக்காக எட்டு சம்மன்களும் வழங்கப்பட்டுள்ளன.
எனவே மது அருந்தி வாகனமோட்டுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். இல்லையேல் கடுமையான சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்தார்