இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒத்திகை

இலங்கையில், 225 உறுப்பினர்களை கொண்டபாராளுமன்றத்தை பதவிக்காலம் முடிவடைய 6 மாதங்களுக்கு முன்பே அதிபர் கோத்தபய ராஜபக்சே கலைத்தார். ஏப்ரல் 25ஆம் தேதி, தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 20-ந் தேதி தேர்தல் நடக்கும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு நீடிப்பதால், அந்த தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை மாத இறுதிக்கும், ஆகஸ்டு மாத மத்திக்கும் இடையே தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையான தேர்தலுக்கு தயாராவதற்காக, தேர்தல் ஒத்திகை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.

அதற்காக, சுகாதாரத்துறையுடன் இணைந்து சுகாதார வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

தேர்தல் ஒத்திகைக்கு கல்லே மாவட்டத்தில் உள்ள அம்பலங்கோடா வாக்குச்சாவடி எல்லையில் உள்ள ஒரு புத்தர் கோவில் அரங்கம் தேர்வு செய்யப்பட்டது. அந்த வாக்குச்சாவடியை சேர்ந்த 200 வாக்காளர்கள், ஓட்டுப்போட தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களது வீடுகளுக்கு சென்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. ஓட்டை குறிப்பதற்காக பேனா கொண்டு வருவதுடன், முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, அந்த வாக்காளர்கள், முக கவசம் அணிந்து, தேர்தல் ஒத்திகையில் பங்கேற்று வாக்களித்தனர்.

சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொருவரும் வாக்களிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்த ஒத்திகையில் கிடைத்த அனுபவங்களை உண்மையான தேர்தலில் பயன்படுத்துவோம் என்று தேர்தல் கமிஷன் உயர் அதிகாரி சமன் ரத்நாயகே கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here