உடல் ஊனத்திற்கும் நல்ல உள்ளத்திற்கும் வெகுதூரம் என்பதில் உண்மை இருக்கிறது.
உடல் ஊனம் என்பது வெளித்தோற்றம். உள்ளம் என்பதை வெளித்தோற்றத்தால் உணரமுடியாது அதை உணர்த்த செய்கை ஒன்றே கைகொடுக்கும். அந்தச்செய்கை எதுவாக இருந்தால் நல்ல உள்ளத்தை அறிய முடியும்?
தேவை அறிந்து, காலம் உணர்ந்து செய்வதும் நல்ல உள்ளத்தைக் காட்டும் கருவியாகும். அந்தத்தேவை மிக அவசியமானது என்றால் அதற்கு முதன்மை தருவது வையத்தில் போற்றப்படும்.
நல்ல உள்ளம் அனைவருக்கும் இருக்கிறது. அதைப் பயன்படுத்த பலருக்கு வாய்ப்பு ஏற்படுவதில்லை. வாய்க்கின்றவர்களுக்கு உடல் ஊனம் தடையாக இருப்பதே இல்லை. அதற்கு உதாரணமாக விளங்குகிறார் ஒருவர்.
அவர், ரத்ததானம் செய்திருப்பது பெரிய செய்தி அல்ல. 42 ஆவது தடவை என்பதுதான் அவரைப் பெருமைக்குரியவாராக்கி இருக்கிறது. கிள்ளானில் சொக்கா கக்காய் என்ற இயக்கத்தின் ஏற்பபாட்டில் நடந்த நிகழ்ச்சியில் அவர் இந்தச் சேவையை 42 ஆவது தடவையாக செய்திருக்கிறார்.
நடக்கமுடிந்தவர்கள் ரத்ததானத்திற்கு முன் வராதபோது சக்கர வண்டியில் நடமாடும் ஒருவர் ரத்தாதானம் செய்வது சமூக உதாரணம். அதைச்செய்திருக்கும் அவர் உயர்ந்த மனிதர். உயரத்தால் அல்ல, உள்ளத்தால்!