துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் உளவுத்துறை இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். இவற்றின் மதிப்பு சுமார் 12 கோடி ரூபாயாகும். வெளிநாடுகளில் இருந்து, தங்கம், சிகரெட், போதை பொருட்கள் உள்ளிட்டவவை கடத்தப்படுவது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடுத்தப்படுவதை தடுக்க விமான நிலையத்திலும், பிற பகுதிகளிலும் சுங்க வரித்துறை அதிகாரிகள் முழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் துபாயில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 12 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் உளவுத்துறை இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பேரீட்சைப்பழ பெட்டிகளில் அடைக்கப்பட்ட இந்த சிகரெட்டுகளின் கார்ட்டூன்களை கடத்தி வந்த மனீஷ் சர்மா மற்றும் சுனில் அஸ்வந் ஆகிய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, 32 ஆயிரத்திற்கும் அதிகமான கார்ட்டூன்களில் சுமார் 72 லட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணையில் போலியான நிறுவனங்களின் பெயரில் இந்த சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 80 நாள்கள் ஊரடங்கின் காரணமாக வெளிநாட்டு சிகரெட் புகைப்போருக்கு சரக்குகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நீடிப்பதால் அதிக விலைக்கு விற்பனை செய்ய இவை கடத்தி வரப்பட்டன. இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அதிகாரிகள் சோதனை நடத்தியதில் இவை சிக்கியிருக்கின்றன.