கேரளா: திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 12 பேர் பலி

திருவனந்தபுரம் , கேரள மாநிலம் திருச்சூர் அருகே முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடைபெற இருக்கும் திருச்சூர் பூரம் பண்டிகைக்கான தயாரிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், திருவாம்பாடி பிரிவின் மாதிரி பட்டாசு நிகழ்ச்சிக்காக அந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் ஏற்பட்ட இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆலையின் உரிமையாளர் சதீஷும் தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நடந்தபோது ஆலையில் சுமார் 40 தொழிலாளர்கள் இருந்திருக்கலாம் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். சிலர் இன்னும் உள்ளே சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த வெடிவிபத்துகள் ஏற்பட்டதாகவும், அதன் சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்டதாகவும் கூறப்படுகிறது. வெடிவிபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

குறுகிய சாலைகள் காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மேலும் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here