விமானப்படை அதிகாரியான தேநீர்க்கடை உரிமையாளரின் மகள்!

மத்தியபிரதேச மாநிலம் நீமுச் பகுதியை சேர்ந்த தேநீர்க்கடை உரிமையாளரின் மகளான ஆஞ்சல் கங்வால் இந்திய விமானப்படை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் பயிற்சியில் சிறந்து விளங்கியதற்காக குடியரசுத்தலைவரிடம் பட்டயமும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளார். அவர் துண்டிகல் விமானப்படை அகாடமியில் பயிற்சி பெற்று வந்துள்ளார். பல்வேறு இன்னல்களை கடந்து வெற்றி பெற்றுள்ள ஆஞ்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பாதுகாப்பு படையில் பணியாற்ற வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ஆசைப்பட்டதாகவும், தற்போது அந்த சீருடையில் பெற்றோர் முன் நிற்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஆஞ்சல் கூறியுள்ளார். தனது பெற்றோர் இந்த நிலையை அடைவதற்கு மிகவும் உதவி செய்ததாகவும், ஆனால் கொரோனா பாதிப்பால் அவர்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது சற்று வருத்தமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் விமானப்படை பயிற்சிக்கு வருவதற்கு முன்பு மத்தியப்பிரதேச காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றியுள்ளனர். அதன்பிறகு எட்டு மாதங்கள் தொழிலாளர் நலத்துறை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். பாதுகாப்பு படை மீது இருந்த பற்றின் காரணமாக இதற்கான பயிற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

மகளின் வெற்றி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள தேநீர்க்கடை வைத்திருக்கும் தந்தை சுரேஷ் கங்வால், ‘எந்த ஒரு மகளும் தனது தந்தைக்கு கொடுக்கும் சிறந்த பரிசு இதுவாகதான் இருக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்த சூழலிலும், எனது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டேன். ஆஞ்சல் சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட பெண். கடையில் வேலை பார்த்துக் கொண்டே தனது வீட்டுப்பாடங்களை எழுதுவார். பல்வேறு பிரச்சனைகளை கடந்து மகள் இந்த நிலையை அடைந்துள்ளது பெருமையாக உள்ளது’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here