கீழடியில் புதிதாக துருத்தியுடன் சிறிய ரக உலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
6ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் ரூ.40 லட்சம் செலவில் நடந்து வருகிறது. கீழடியில் இதுவரை கருப்பு-சிவப்பு வண்ண பானைகள், பானை ஓடுகள், விலங்கின் எலும்பு உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 5வதாக தோண்டப்பட்ட குழியில் துருத்தியுடன் கூடிய (இரும்பு உள்ளிட்ட பொருட்களை உருக்க, எரியும் நெருப்பிற்கு காற்று அடிக்கும் அமைப்பு) மினி உலைகலன் கண்டறியப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக கண்டறியப்பட்டுள்ள இந்த உலைகலன் மேற்புறம் வெளிப்பட்டுள்ளது. குறுகிய வாய்ப்பகுதியுடன் கூடிய இந்த கலனின் உட்புறம் சேதமடைந்த பானைகளும் உள்ளன. கீழடியில் ஏற்கனவே நடந்த 5ம் கட்ட அகழாய்வில் கழிவுநீர் வடிகால்கள், நீர் சேகரிப்புத் தொட்டிகள் என 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நகரநாகரீகத்துடன் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பான முழுமையான விவரங்களை சேகரிப்பதற்காக அங்கு தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெறுகிறது.