இங்குள்ள கூட்டரசு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிகள் செல்லும் பிரதியேக வழியில் காரை ஓட்டிச் சென்ற நபரின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்தது.
வோல்வோ ரக காரை ஓட்டிச் சென்ற ஆடவரை காவல் நிலையத்திற்கு வரும் படி உத்தரவிடப்பட்டது.
தம்முடைய நிறுவனத்திலிருந்து ஷா ஆலமில் உள்ள கார் பழுது பார்க்கும் பட்டறைக்கு சென்றுள்ளார். அப்போது வேஸ் எனப்படும் சாலை வழிக்காட்டியை உபயோகித்துள்ளார். அது மோட்டார் சைக்கிள்கள் செல்லும் பாதையை காட்டியுள்ளது. 53 வயது நிரம்பிய அந்த ஆடவர் தாம் மோட்டார் சைக்கிள் பாதையில் சென்றுக் கொண்டிருப்பதை உணராமல் தொடர்ந்து காரை செலுத்தி வந்துள்ளார் என்று போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அதன் பின்னர் சில மோட்டார் சைக்கிளோட்டிகளின் வழிக்காட்டலுடன் அப்பாதையில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்குள் நுழைந்ததாக அந்த ஆடவர் விசாரணையில் கூறியுள்ளார்.
மேலும் அந்த ஆடவரிடம் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அதில் எவ்வித பாதிப்பும் இல்லை என பெட்டாலிங் ஜெயா டிராஃபிக் போலீசார் தெரிவித்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக டிபிபி தரப்பிடம் புலன் விசாரணைக்கான கடிதம் வழங்கப்பட்டிருக்கும் வேளையில் அந்த ஆடவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.