பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 28 :
15வது பொதுத் தேர்தலில் (GE15) கட்சி முடிவுகளுக்கு கட்டுப்படும் மற்றும் விசுவாசமாக இருக்கு வேட்பாளர்களை மட்டுமே தமது கட்சி நிறுத்தும் என்று அம்னோ கட்சி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
“2018 தேர்தலுக்குப் பிறகு, விசுவாசத்தின் மதிப்பை நாங்கள் உணர்ந்து கொண்டோம், மேலும் கட்சி மற்றும் பாரிசான் நேஷனல் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுபவர்களை மட்டுமே நாம் வேட்ப்பாளர்களாக தேர்ந்தெடுப்போம்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (அக். 28) பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறினார்.
தாங்கள்தான் பெரியவர்கள் என்று கர்வமுள்ளவர்கள் அல்லது தங்களைப் பற்றி மட்டும் நினைக்கும் சுயநலவாதிகளுக்கு அம்னோவில் போட்டியிட வாய்ப்பில்லை என்று கூறிய அவர், அப்படிப்பட்டவர்கள் தாங்கள் தற்போது அனுபவிக்கும் அனைத்தும் ஒரு காலத்தில் அம்னோ உறுப்பினர்களாக இருந்ததால் தான் வந்தது என்பதை உணர வேண்டும் என்றார்.
“அம்னோவுக்கு விசுவாசமானவர்கள் தேவை மற்றும் அவர்களைப் வெளிப்புற சக்திகளின் ஆசை வார்த்தைகள் எதுவும் எளிதில் எடுபடாது.
எனவே கட்சியில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் தேர்தலில் வெற்றிபெறும் போது கட்சிக்கு எதிராக மாறாத எண்ணம் கொண்டவர்களையே தேர்தல் களத்தில் போட்டியிட வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.