பேராசிரியரின் முகநூலில் ஆபாச படங்களை பதிவிட்ட மனைவி

திருச்சி பாலக்கரை போலீஸ் எல்லைக்குட்பட்ட பீமநகர் காஜியார் தெருவை சேர்ந்தவர் மோகன ஜெய்கணேஷ்(வயது 32). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மயிலாடுதுறை குறிஞ்சி நகரை சேர்ந்த சுகுமார் என்பவரின் மகள் தாட்சாயினி(வயது 28)க்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தாட்சாயினியும் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

திருமணம் ஆன சில மாதங்களில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரச்சனை உருவானது. அதைத்தொடர்ந்து கணவர் மோகன ஜெய்கணேசை பிரிந்து, தனது பெற்றோர் ஊரான மயிலாடுதுறைக்கு தாட்சாயினி சென்று விட்டார். இருப்பினும் கணவர் மீதான கோபம் அவருக்கு தீரவில்லை. எப்படியாவது, கணவரை அசிங்கப்படுத்தி கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என தாட்சாயினி திட்டமிட்டார்.

அதற்கு தனது கல்லூரி கால நண்பரான கட்டுமான தொழில் செய்யும் தஞ்சாவூர் மாவட்டம், சிவாஜி நகரை சேர்ந்த கிருபாகரன்(28) உதவியை நாடினார். இருவரும் திட்டமிட்டு, மோகன ஜெய்கணேசின் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தில் திருட்டுத்தனமாக அவர் பதிவிட்டதுபோல, சில பெண்களின் ஆபாச படங்களை ‘மார்பிங்‘ செய்து பதிவு செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த பதிவுக்கு பல அருவெறுக்கக்தக்க கருத்துக்கள் பதிவானது. பெண்களின் ஆபாச புகைப்படங்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவானதை கண்டு மோகன ஜெய்கணேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பாலக்கரை போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் விசாரணை நடத்தி, தாட்சாயினி, அவரது நண்பரான கிருபாகரன் ஆகியோர் மீது மோசடி செய்து தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர், முகநூல் பதிவுக்கு உடந்தையாக செயல்பட்ட தாட்சாயினியின் நண்பர் கிருபாகரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தாட்சாயினியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here