இங்குள்ள ஸ்தாப்பாக் பிபிஆர் அடுக்ககத்தைச் சேர்ந்த ஹாய் யி ஜேக் (7 வயது) எனும் சிறுவன் ஜூன் 27ஆம் தேதி மாலை 4.30 மணியிலிருந்து காணவில்லை என வங்சா மாஜூ மாவட்ட காவல் நிலையம் தகவல் தெரிவித்திருந்தது.
இச்சிறுவனை நேரில் கண்டாலோ அல்லது தகவல் தெரிந்தாலோ வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் படைத் தலைவர் டிஎஸ்பி ஸ்டிவன் கணேசன் 016-3767390, இன்ஸ்பெக்டர் முகமட் ஃபாயிஸ் பின் பைமான் 017-7190170 ஆகியோருக்கு தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களை போலீசார் கேட்டு கொண்டனர்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு 7 மணிக்கு பிபிஆர் டேசா ரெஜாங்கில் அச்சிறுவன் மீட்கப்பட்டான் என்று போலீசார் தெரிவித்தனர்.
தம்முடைய தாத்தாவுடன் ஆயர் பானாஸ் அடுக்ககத்தில் தங்கியிருந்த அச்சிறுவன் அப்பாவை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் அவரைச் சந்திப்பதற்காக டேசா ரெஜாங்கில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்றுள்ளான் என்று விசாரணையில் தெரிய வந்தது.
அச்சிறுவன் காயங்கள் ஏதும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதை போலீசார் உறுதிபடுத்தினர்.
அச்சிறுவன் உட்பட அவரின் தந்தை, தாத்தா ஆகியோரும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் அச்சிறுவனை யார் பார்த்துக் கொள்வது என்று கலந்து பேசப்பட்டது. அதில் இருவருமே அச்சிறுவனை சேர்ந்து பார்த்துக் கொள்வதாக முடிவெடுத்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இவ்விவகாரத்தில் போலீசாருக்கு உதவி வழங்கி தகவல்கள் கொடுத்த பொதுமக்களுக்கு வங்சா மாஜூ மாவட்ட போலீசார் நன்றி தெரிவித்தனர்.