எதிர்வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த ஆண்டின் மூன்றாவது சந்திரகிரகணம் நிகழவுள்ளது. இதன்படி, ஐந்தாம் தேதி காலை சந்திரகிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியன், பூமி, சந்திரன். இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம்.
இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் சந்திர கிரகணம் ஜூன் 21ஆம் தேதி ஏற்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் 5ஆம் தேதி இந்த ஆண்டிற்கான மூன்றாவது சந்திரக்கிரகணம் நிகழவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திரக்கிரகணம் தெளிவற்ற சந்திர கிரகணமாக காட்சி தரும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் காலை வேளையில் இந்த சந்திரகிரகணம் நிகழவுள்ளது. இதன்படி, காலை 8.38 மணிக்கு சந்திரகிரகணம் ஆரம்பிக்கும் எனவும், 9.59 மணிக்கு உச்சநிலையை அடையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணி 43 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த சந்திரகிரகணம் காலை 11.21 மணிக்கு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், மேற்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் இந்த சந்திரக்கிரகணம் தென்படும் என கூறப்படுகின்றது.