கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் நடைபெற்ற 6 இடைத்தேர்தல்களில் தொடர் வெற்றியை குவிக்கும் தேசிய முன்னணியை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்று அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
தராசு சின்னத்தை மக்கள் விரும்பவில்லை என்று கூறியவர்களுக்கு தேமுவின் இந்த தொடர் வெற்றிகள் ஒரு பதிலடியாகும். இந்த 6 இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் மக்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு இருப்பது நிருபனமாகியது. தேமுவின் பங்காளிக் கட்சிகள், முவாஃபாக்காட் நேஷனல் ஆதரவு இருந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியினை தேசிய முன்னணி அடையும்.
பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? சினி இடைத்தேர்தல் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி தேசிய முன்னணியின் சேவையையே மக்களும் விரும்பி வாக்களித்துள்ளனர் என்று சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமு வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹிட் ஹமிடி கூறினார்.
முன்னதாக, கேமரன் மலை நாடாளுமன்றம், செமினி சட்டமன்றம், ரந்தாவ் சட்டமன்றம், தஞ்சோங் பியாய் நாடாளுமன்றம், கிமானிஸ் நாடாளுமன்றம் ஆகிய இடைத்தேர்தல்களில் தேமு மகத்தான வெற்றி பெற்றது.
சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமு வேட்பாளர் முகமட் ஷரிம் முகமட் ஸைய்ன் (வயது 41) மொத்தம் 13,872 வாக்குகளில் 12,650 வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்ச்சை வேட்பாளர் தெங்கு ஸைனுல் ஹிஷாம் ஹூசினுக்கு 1,222 வாக்குகளும் மற்றொர் சுயேட்ச்சை வேட்பாளர் முகமட் ஷூக்ரி முகமட் ரம்லிக்கு வெறும் 137 வாக்குகளே கிடைத்துள்ளன.