திடீரென்று மாயமான நட்சத்திரம் விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. என்ன நடந்தது?
வானத்தில் திடீர் என்று நட்சத்திரம் ஒன்று மாயமாக மறைந்த சம்பவம் வானியல் ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்திற்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கி உள்ளது.
வானத்தில் லட்சம் கோடி நட்சத்திரங்களும், கிரகங்களும், சூரியன்களும் இருக்கின்றன. இதில் அவ்வப்போது ஆச்சரியங்கள், நினைத்து பார்க்க முடியாத மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகளும் இருக்கின்றன. இந்த நிலையில்தான் தற்போது வானத்தில் புதிய ஆச்சரியம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஒரு பெரிய ராட்சச நட்சத்திரம் ஒன்று மொத்தமாக மறைந்து காணாமல் போய் உள்ளது.
என்ன நடந்தது
பூமியில் இருந்து 75 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு இருக்கும் கின்மான் டிவார்ப் கேலக்சி என்ற இடத்தில் இந்த நட்சத்திரம் இருந்துள்ளது. இந்த நட்சத்திரத்தை பல்வேறு காரணங்களுக்காக ஐரோப்பாவின் தொலைநோக்கியான யுரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி டெலிஸ்கோப் (European Southern Observatory’s Very Large Telescope) சோதனை செய்து வந்தது.
இந்த சோதனை நடந்து கொண்டு இருந்த நிலையில், தற்போது அந்த நட்சத்திரம் மொத்தமாக மாயமாக மறைந்து உள்ளது. சோதனை செய்து கொண்டு இருக்கும் போதே திடீர் என்று அந்த நட்சத்திரம் மாயமாகி மறைந்து உள்ளது
இதற்கு என்ன காரணம் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக இருந்ததாகவும், அழியும் நிலையில் இல்லை என்றும் கூறுகிறார்கள்.