கோலாலம்பூரில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்களை விநியோகம் செய்து வந்த கும்பலை கோலாலம்பூர் போதைப் பொருள், குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் செந்தூல் காவல் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கைது செய்தனர்.
கடந்த ஜூலை 7ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் நடத்தப்பட்ட இச்சோதனையில், செராஸ் தாமான் லகோன்டா எனும் இடத்தில் 60 வயது நிறைந்த சீன ஆடவர் கைது செய்யப்பட்டார் என்று கோலாலம்பூர் காவல் படைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி மஸ்லான் பின் லாசிம் தெரிவித்தார்.
அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 5,372 கிராம் எரமின் மாத்திரைகள் மற்றும் ரொக்கப்பணம் 1,140 வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அதே தினத்தில் இரவு 7.35 மணியளவில் தாமான் கொன்னோட் எனும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் ஆண், பெண் என இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதோடு, அவர்களிடமிருந்து 100 கிராம் எரமின் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் மூவர் மீதும் எந்த குற்றச்சாட்டுகளும் பதிவாகவில்லை. அதோடு மூவருமே போதைப் பொருள் உட் கொள்ளவில்லை என தெரிய வந்தது.
மேல் விசாரணைக்காக அவர்கள் 6 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 21,800 பேருக்கு விநியோகம் செய்யும் அளவிற்கு இவர்கள் போதைப் பொருட்களை வைத்திருந்தனர் என்றும் டத்தோஸ்ரீ ஹாஜி மஸ்லான் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த மதிப்பு ரி.ம.328,140.00 ஆகும். ரொக்கப்பணம் ரி.ம.1,140.00 வெள்ளியாகும். வாகனங்கள் 3,000.00 வெள்ளியாகும்.