ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, இந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், இளைஞர்கள் பலர் எதையும் பொருட்படுத்தாமல் அங்கும் இங்குமாக வாகனத்திலும், நண்பர்களுடனும் வலம் வருகின்றனர்.

தேவையின்றி வாகனத்தில் சுற்றி திரியும் நபர்கள் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 144 தடை உத்தரவை மீறியதாக 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் பகுதியில் 38 ஆயிரத்து 357 வழக்குகளும், நகர் பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களிலும் இதே நிலைதான்.

இந்த வழக்குகளில் சிக்கும் நபர்களுக்கு வரும்காலங்களில் வேறு சில சிக்கல்களும் வரக்கூடும். பொதுவாக, 144 தடை உத்தரவை மீறினால் அபராதம் விதிப்பார்கள், கைது செய்து விட்டு விடுவார்கள், வாகனத்தை பறிமுதல் செய்வார்கள் என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். இவர்கள் மீதான வழக்குகள் காவல்துறையினரின் தொடர் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும் வகையிலேயே உள்ளன. இதனால் வழக்கில் சிக்கியவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுபற்றி மதுரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்படும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், கொள்ளை நோய் தடுப்பு சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதாவது இந்திய தண்டனை சட்டம் 188, 269, 271 உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படும். இதில் குற்றவாளியாக சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை அரசு வேலைக்கு செல்ல முடியாது. எல்லா வகையான அரசு வேலைகளுக்கும் செல்லும் போது, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றவழக்குகள் இருக்கிறதா? என ஆராயப்படும். அந்த வகையில் இதுவும் ஒரு குற்ற வழக்குதான். முக்கியமாக வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்யலாம் என நினைக்கும் இளைஞர்களுக்கு இது பேராபத்தை ஏற்படுத்தும். பாஸ்போர்ட்டு பெற முடியாத நிலை உருவாகும்.

கல்வி, தொழில், மருத்துவத்திற்காகவும் வெளிநாடு செல்ல முடியாது. ஒரு சில தனியார் நிறுவனங்களில் கூட தற்போது வழக்கு குறித்த விவரம் கேட்கப்படுகிறது. அவ்வாறு கேட்கும் பட்சத்தில் தனியார் நிறுவன வேலைக்கு செல்வதிலும் சிக்கல்கள் ஏற்படும். எனவே இளைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் தேவையின்றி வெளியில் சுற்றி திரிவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கு சட்டத்தை மீறும் நபர்களுக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அதுபோல், அபராதம் மட்டும் செலுத்தும் வகையிலும், அபராதத்துடன், தண்டனையும் அளிக்கும் வகையிலும் சட்டத்தில் இடம் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here