சிப்பாங்: துடோங் (சால்வையை) கொண்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் பல்கலைக்கழக விரிவுரையாளரின் கணவர், இரண்டு வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (ஆக.11) அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. சைபர்ஜெயாவின் ஜாலான் பெர்சியாரன் சிப்பாங், தாசிக் சைபர் பூங்காவில் மைசதுல்னிசா ஓத்மானை ஜூலை 29 ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை கொலை செய்ததாக மொஹட் ஹேரில் இசுவான் ஏ.சமத் (41) மீது குற்றம் சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவுடன் கட்டாய மரண தண்டனையை விதிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை என்பதோடு ஒரு வழக்கறிஞரை எவ்வாறு நியமிப்பது என்று நீதிமன்றத்தில் கேட்டார். இது மாஜிஸ்திரேட் ஆயுனி இசாட்டி சுலைமான், குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கத் தூண்டியது.
துணை அரசு வக்கீல் நூருல் ஃபராஹீன் யஹ்யா கூறுகையில், குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இன்று யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றார். ஒரு வழக்கறிஞரை எவ்வாறு பெறுவது என்பது குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்க விசாரணை அதிகாரிக்கு அறிவுறுத்தப்படும் என்று அவர் கூறினார்.
நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கவில்லை என்பதோடு செப்டம்பர் 14ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். குற்றம் சாட்டப்பட்டவர், அரசு சாரா அமைப்பின் (என்ஜிஓ) தன்னார்வலராக இருந்தவர். முன்பு ஜூலை 31 முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஜூலை 30 ம் தேதி, யுனிவர்சிட்டி இஸ்லாம் அந்தாராபங்சா மலேசியாவின் விரிவுரையாளர் தனது காரில் பி.கே.என்.எஸ் பிங்கிரான் சைபர்ஜெயா, சிப்பாங்கில் உள்ள ஒரு ஏரியின் அருகே இறந்து கிடந்தார்.