தமிழ் சினிமாவில் நெப்போட்டிசம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிசத் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
நடிகர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் அவதூறு பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அவருக்கு நன்றி தெரிவித்து சூர்யா பதிவிட்டுள்ளதாவது: “எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்” என கூறியுள்ளார்.
மேலும் கடந்த 2018-ம் ஆண்டு தான் பதிவிட்ட “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என்ற டுவிட்டையும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சூர்யா சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.





















