பீகார் மாநிலத்தில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது பீகாரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்படும் என்று தெரிவித்த இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏராளமான விளக்கங்கள் தேவைப்படுகிறது. வாக்காளர்களுக்கு ஒருவேளை கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையில் ஆயுள் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் எம்.பி. மனோஜ் ஜா கூறுகையில் ‘‘வாக்காளர்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டம் வழங்கப்பட வேண்டும். தேர்தலில் அவர்கள்தான் முக்கியமானவர்கள். தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்காவிடில் 30 அல்லதுது 32 சதவீதம் வாக்குகள்தான் பதிவாகும்’’ என்றார்.