வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு ‘எலக்ட்ரானிக்ஸ்’ கழகம் என்ற ‘எல்காட்’ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம், ஐ.டி.இ.எஸ்., ஹார்வேர் பிரிவு போன்றவற்றில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்க 12 மாதங்களுக்கு பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட குறுகிய காலத்தில், அடிக்கடி சென்னைக்கு வந்து, ‘எல்காட்’, அரசு அதிகாரிகளை அழைத்துப் பேச வேண்டியதுள்ளது. தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் சென்னைக்கு வருவதற்கு இ-பாஸ் மற்றும் தனிமைப்படுத்துவது போன்றவை அவசியமாக உள்ளன.
‘எல்காட்’ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்த நிறுவனம் முதலீட்டை ஈர்க்கும் பணிகளை தொடங்கியிருப்பதாக அதன் முதன்மை ஆலோசகர் தகவல் அளித்துள்ளார். இதற்காக பெங்களூரு, ஆந்திர பிரதேசத்தில் இருந்து தமிழகத்துக்கு அந்த நிறுவனத்தினர் வந்து தங்க வேண்டியதுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
எனவே இதற்குத் தேவையான ‘இ-பாஸ்’ வழங்குவதோடு சென்னையில் 72 மணிநேரம் தங்குவதற்காக அவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ‘எல்காட்’ நிறுவன மேலாண்மை இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு தகவல் தொழில்நுட்பத் துறையும் பரிந்துரைத்துள்ளது.
மேலும், தொழிற்சாலைகள், விருந்தோம்பல் சேவை, சட்டப் பணிகள், ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., தொழில், பொழுதுபோக்கு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் உள்ள வர்த்தக பயணிகளுக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து 72 மணி நேரம் தங்குவதற்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்றும், அதன் மூலம் தமிழகத்துக்கு வர்த்தக ரீதியான பயணம் மேம்படுவதோடு, தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையை அரசு கவனமுடன் பரிசீலித்து, தொழிற்சாலைகள், விருந்தோம்பல் சேவை, சட்டப் பணிகள், ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., தொழில், பொழுதுபோக்கு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் உள்ள வர்த்தக பயணிகள் தமிழகத்துக்கு வந்து குறுகிய கால அளவாக 72 மணிநேரம் இங்கு தங்கும் நிலையில் அவர்களுக்கு வர்த்தக பயணிகள் என்ற ‘இ-பாஸ்’ வழங்கப்படுவதோடு, தனிமைப்படுத்துதலில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.