மகனை எரித்துக் கொன்ற தந்தை கைது

ராமநாதபுரம் அருகே பெற்ற மகனையே எரித்துக்கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைப் பகுதி குஞ்சார வலசையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் முனியசாமி (24). வாடகை வேன் ஓட்டுநர். இவர் அதே பகுதியான அக்காள்மடம் மீனவர் காலனியைச் சேர்ந்த மரியா அபிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களது மகன் துரை (ஒன்றரை வயது). முனியசாமி வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மரியா அபிஷாவின் சகோதரிக்குத் திருமணம் நடந்துள்ளது. அதற்கு செல்லக்கூடாது என மனைவியை முனியசாமி கண்டித்துள்ளார். ஆனால், கணவரின் தடையை மீறி மரியா அபிஷா சகோதரியின் திருமணத்துக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. மனைவி தனது பேச்சைக் கேட்காமல் அவரது சகோதரி திருமணத்துக்கு சென்றதால்
ஆத்திரமடைந்த முனியசாமி, மகன் துரையை தூக்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மகனுடன் சென்ற முனியசாமி வீடு திரும்பாததை அறிந்த மரியாஅபிஷா தேடியுள்ளார்.

வீடு திரும்பிய முனியசாமியிடம் கேட்டபோதும் சரியான பதில் இல்லையாம்.
இதுகுறித்து சனிக்கிழமை காலையில் மரியாஅபிஷா அளித்த புகாரின் பேரில்
மண்டபம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பெற்ற மகனையே
அடித்துக்கொன்று எரித்ததாக முனியசாமி கூறியுள்ளார். முனியசாமி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் அப்பகுதியில் குழந்தையின் சடலத்தை சனிக்கிழமை பகலில் கைப்பற்றி அதை பிரேதப் பரிசோதனைக்காக
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து முனியசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here