வடக்கு ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் பலியானோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண மற்றும் பிற பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்சரிவில் இடிந்து விழுந்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மாநில அமைச்சர் குலாம் பஹாவுதீன் ஜிலானி இன்று கூறுகையில்,
ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 190 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 170 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்னும் 12 பேர் காணவில்லை.
இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் இறுதியாகவில்லை, மேலும் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சுவதாக கூறினார்.
பர்வானில் மாகாணத்தில் மட்டும் இதுவரை 121 பேர் இறந்துள்ளனர், மேலும் 136 பேர் காயமடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, சுமார் 1,055 வீடுகள் அழிந்துள்ளது, மேலும் 3,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது என்று ஜிலானி கூறினார்.
கோடை காலங்களில், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மழைப் பெய்வதால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.