12 பேர் கைது
ஜோகூர்பாரு –
வட்டிக்குக் கடன் கொடுத்தவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்தாதபோது அவர்களை வட்டிமுதலை அடிமையாக வைத்திருந்தது தெரியவந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கையில் இறங்கிய போலீசார், கடந்த மாதம் 15ஆம் தேதி வட்டிமுதலைக் கும்பலை முறியடித்ததாக ஜோகூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை கூறினார்.
இந்தக் கும்பல் சிங்கப்பூரில் செயல்படும் வட்டிமுதலைக் கும்பலுடன் சேர்ந்து மலேசியத் தொழிலாளர்களைக் குறிவைத்து இந்தச் செயலைப் புரிந்திருக்கின்றது.
கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களை இந்தக் கும்பல், வீடுகளில் சிவப்பு சாயத்தை வீசுவது, வீட்டைக் கிறுக்குவது, நெருப்புப் பந்தை வீசுவது போன்ற குற்றங்களைப் புரிய வேலைக்கு அமர்த்தியதாகவும் தெரியவந்தது.
கொடுத்த வேலையைச் சரியாகச் செய்தால் சிறுகச் சிறுகக் கடன் தொகை கழித்துக்கொள்ளப்படும் எனவும் இந்தக் கும்பல் அவர்களிடம் கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பலைப் பிடிக்க ஜோகூர் பாரு, பத்துபஹாட், சிலாங்கூர், கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 12 பேர் சிக்கினர். இவர்கள் அனைவரும் பதிவுசெய்யப்படாத சிம் கார்டுகளை மொத்தமாக வாங்கிப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது.
14 மடிகணினிகள், 52 கைப்பேசிகள், 5 வாகனங்கள், சிவப்பு சாயம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் ரோந்துக்கார்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் அவர் இந்தத் தகவலைச் சொன்னார்.