விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுவேதாவிற்கு(20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்த செல்வக்குமார்(27) என்ற இளைஞரை பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நவாத்தாவில் உள்ள கோயிலில் வைத்து சுவேதா – செல்வக்குமார் இளம்ஜோடிகளுக்கு இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
பின்னர் மணமகன் வீட்டில் இருவரும் வசித்து வந்த நிலையில், அங்கு திருமணத்திற்கு மறுநாளே புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த சுவேதாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்றனர். மானாமதுரை போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், ஆர்.டி.ஓ.,விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுப்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டு இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் விரைவில் புதுப்பெண் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.