கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவால்லை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு தான் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த வழிகாட்டுதலின்படி, தமிழக அரசும் வரும் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்துள்ள பேட்டியில், பள்ளிகள் திறப்பது பற்றி யோசிக்கும் நிலை தற்போது இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்ததாகவும், செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் வெளியிட்டது போலவும் ஒரு செய்தி குறிப்பு வைரலாக பரவி வருகிறது.
அந்த பொய்யான செய்தி குறிப்பில், “வரும் 14ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தி குறிப்பு சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது.
தற்போது, உள்ள சூழ்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதாக? என்று பலரும் இந்த செய்தி குறிப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பொய்யான இந்த செய்தி குறிப்பு போலியானது என்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிடும் நபர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.