பப்ஜி விளையாட முடியவில்லையே- தற்கொலை

பப்ஜி உள்பட 118 சீன செயலிகள் சமீபத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில் பப்ஜி விளையாட முடியவில்லையே என்ற மன வருத்தத்தில் 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 35 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த மோதலை அடுத்து சீனாவின் செயலிகள் அடுத்தடுத்து தடைசெய்யப்பட்டன. ஹலோ, டிக்டாக் உள்பட முதலில் 59 செயலிகள் முதல்கட்டமாகவும், அதன் பின்னர் தற்போது பப்ஜி உட்பட 118 செயலிகளும் தடைசெய்யப்பட்டன. பப்ஜி தடையால் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ஒரு சிலர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்ததால், அந்த விளையாட்டை விளையாட முடியாமல் மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர் பப்ஜி விளையாட முடியாமல் கடந்த சில நாட்களாக பெரும் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here