பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாடு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய-அமெரிக்க செயலாற்றுக் குழுவின் 17வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கடந்த 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற்றது.
அதையடுத்து இரு நாடுகளும் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதச் செயல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவற்றை இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக எதிர்க்கின்றன. தங்கள் நாட்டில் உள்ள எந்தவொரு பகுதியும் பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் அடைக்கலம் அளிக்கவில்லை என்பதை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டும்.
அந்நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்டவற்றுடன் தொடா்புடைய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய அரசும் அந்நாட்டு மக்களும் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா தொடா்ந்து ஆதரவு தெரிவிக்கிறது. இவ்வாறு அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.