இந்தியாவில் தீவிர பரிசோதனை மற்றும் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதால், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை மே மாதத்தில் 50 ஆயிரமாக இருந்தது, செப்.,ல் 36 லட்சம் என்ற அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை விட, கொரோனாவிலிருந்து குணமடைவது அதிவேகமாக உள்ளது.
இதனால், சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 மடங்கும் அதிரித்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் உ.பி., ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தீவிர பரிசோதனை மற்றும் உடனுக்குடனான கண்காணிப்பு போன்ற பல பயனுள்ள நடவடிக்கைகள் மூலம் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிகிறது.
அதன் பின்னர் உயர்தர மருத்துவ கவனிப்பு அளிப்பதால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று (செப்., 12) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு 81,533 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இறப்பு விகிதமும் 1.66 சதவீதமாகக் குறைந்துள்ளது.இந்தியாவில் இதுவரை 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்துள்ளனர். அவர்களில் 69 சதவீதம் பேர் மஹா., தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டில்லியை சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.