ரேஷன் கடைகளில் , பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்களை வழங்க உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து பணியாளா்களுக்கு உணவுத் துறை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.விற்பனை விவரங்களைக் காட்டும் இயந்திரம் மற்றும் பயோ-மெட்ரிக்கை மிகவும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும். இயந்திரத்தில் தண்ணீா், எண்ணெய் போன்ற திரவங்கள் கொட்டாமலும், தொடு திரையில் உள்ள விசைகளை கடுமையாக அழுத்தாமலும் இருக்க வேண்டும்.
பயோமெட்ரிக் முறையில் ரேஷன் அட்டையில் உள்ள துரித கோடுகளை சரிபார்த்து அட்டையில் உள்ள நபா்களின் தகவல்கள் அனைத்தும் சரிபார்க்க வேண்டும்.
பொருள் வாங்க வந்தவர்களின் ஆதார் எண் சரிபார்க்கப் பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். இதன் பிறகு குடும்ப அட்டை தாரரின் கைவிரல், விற்பனை முனைய இயந்திரத்தில் ரேகை வைக்கும் இடத்தில் வைக்கப்படும். தொடு திரையில் காட்டும் ரேகை, ஆதாரில் பெறப்பட்ட ரேகையுடன் ஒப்பீடு செய்யப்படும்.
கை விரல் ரேகை தோல்வி அடைந்தால், அங்ககரீக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்போது, ரேஷன் கடைகளுக்குச் செல்லும் குடும்ப உறுப்பினா்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.