மருத்துவர் உதவியுடன் 20 நிமிடம் வரை எழுந்து அமர்கிறார் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறது.
அண்மையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து அவருக்காக பிரபலங்கள், ரசிகர்கள் வேண்டுதலில் ஈடுபட்டனர். எனினும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடைய மகன் பாடகர் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். அதன்படி, நேற்று எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
நுரையீரல் செயல்பாடு முன்னேறியுள்ளது. குணமாகி வருவது எக்ஸ்ரேவில் நன்றாகத் தெரிகிறது. பிசியோதெரபியும் நடந்து வருகிறது. அப்பா அதில் சுறுசுறுப்புடன் பங்கேற்று வருகிறார்.
மருத்துவர்கள் அப்பாவை உட்கார வைத்தார்கள். அப்பாவால் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை உட்கார முடிகிறது. வாய் வழியாகச் சாப்பிட வைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அனைத்து அறிகுறிகளும் நன்றாக உள்ளன. அப்பா சீராக இருக்கிறார். முன்னேற்றம் தொடர்கிறது. இவ்வாறு அந்த வீடியோவில் எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.