இறந்து கரை ஒதுங்கிய 400க்கும் அதிகமான பைலட் திமிங்கலங்கள்

இறந்து கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள்… ஆஸ்திரேலியா கடற்கரைகளில் 400 – க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா தீவின் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பு 300 – க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஆழமற்ற பகுதியில் சிக்கித் தவித்த அந்தத் திமிங்கலங்களை மீட்டு ஆழமான பகுதியில் விட ஆராய்ச்சியாளர்களும் தன்னார்வலர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவற்றில் பெரும்பாலான திமிங்கலங்கள் மரணமடைந்தன. இந்த நிலையில், மேலும் சில திமிங்கலங்கள் மெக்யூரி துறைமுகம் அருகே இறந்துபோய் கரை ஒதுங்கியுள்ளன. கொத்துக்கொத்தாக மடிந்து கடற்கரையில் ஒதுங்கியிருக்கும் திமிங்கலங்களைப் பார்க்கும்போதே மனம் பதைபதைக்கச் செய்கிறது.

ஏழு மீட்டர் நீளம், 3 டன் எடை வரை வளரக்கூடியவை பைலட் திமிங்கலங்கள். இவை பெரும்பாலும் மந்தையாக வசிக்கும் தன்மையுடையவை. எங்குச் சென்றாலும் கூட்டம் கூட்டமாகத்தான் இடம்பெயரும். அப்படி இடம்பெயரும் போது சில நேரங்களில் அவை ஆழமற்ற கடற்கரையில் சிக்கி விடுவதுண்டு.

டாஸ்மானியாவில், திமிங்கலங்கள் அடிக்கடி கரை ஒதுங்கி இறப்பது ஏன் என்ற காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனாலும் ஆராய்ச்சியாளர்கள், திமிங்கலக் கூட்டத்தை வழிநடத்தும் மூத்த திமிங்கலம் வழி தவறி தனது மந்தையை ஆழமில்லாத பகுதிக்கு இழுத்து வந்து விடுவதுண்டு.

அப்போது, திமிங்கலங்களின் உடல் முழுவதும் நீருக்குள் மூழ்காமல் இருந்தால், அதன் அதிக எடையே அவற்றை எளிதில் நசுக்கிக் கொன்றுவிடும் என்கிறார்கள். இதற்கு முன்பு டாஸ்மானியாவில், 1935 ம் ஆண்டில் 294 பைலட் திமிங்கலங்களும், 2009 ம் ஆண்டு 200 பைலட் திமிங்கலங்களும் கரை ஒதுங்கின. ஆனால், தற்போது 400 திமிங்கலங்களுக்கு மேல் இறந்து கரை ஒதுங்கியுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here