உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் அப்பெண்ணின் குடும்பத்தினரை நேற்று முன்தினம் மாலை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில் பிரியங்கா நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியரால் மிக மோசமாக நடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவரைக் காப்பாற்ற முயற்சிப்பது யார்? அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். ஒட்டுமொத்த விவகாரத்தில் அவரது பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதி விசாரணை வேண்டும் என கோரும்போது, எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக்குழு) விசாரணை மற்றும் சிபிஐ விசாரணை என மழுப்புவது ஏன்? உ.பி. அரசு தனது உறக்த்தில் இருந்து விழித்திருக்குமானால், அந்தக் குடும்பத்தின் கருத்துகளை கேட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.