கொரோனா பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனா குறித்து பயப்பட வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.அமெரிக்காவில் நவ.,3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டே அங்கு இருந்தவாறே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த டிரம்ப், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.ராணுவ மருத்துவமனையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை புறப்பட்டார். டிரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழு கூறுகையில், ‘டிரம்புக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பாக உள்ளது. ரெம்டெசிவர் மருந்து 5வது டோஸ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு செல்லும் அளவு அவர் உடல் நலம் தேறிவிட்டார்,’ என தெரிவித்தது. வரும் 15ம் தேதி ஜோ பிடனுடன் நடைபெற உள்ள விவாதத்தில் டிரம்ப் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பயம் வேண்டாம்:டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னர் டுவிட்டரில் டிரம்ப் பதிவிட்டதாவது: நான் இன்று (அமெரிக்க நேரப்படி) 6:30 மணிக்கு பெரிய வால்டர் ரீட் மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறேன்.
மிகவும் நன்றாக இருக்கிறது. கொரோனா குறித்து பயப்பட வேண்டாம்,’ என பதிவிட்டுள்ளார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகையை அடைந்த டிரம்ப், மாஸ்க்கை அகற்றினார். இதனை விமர்சித்த ஜோ பிடன், மாஸ்க் அணியுமாறு பதிவிட்டார்.