பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, இயற்கை எரிவாயு சந்தையை சீர்திருத்தும் வகையில், அவற்றிற்கு முழுமையான சந்தை சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில் நடத்துவதை எளிமையாக்கும் வகையிலும் மத்திய அரசு அத்துறையில் தொடர்ச்சியாக சீர்திருத்தத்தை செய்து வருகிறது.
அதன் மூலம் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இயற்கை எரிவாயு விற்பனையில் வெளிப்படையான போட்டி முறையை ஏற்படுத்த சுதந்திரமான சந்தையை அனுமதித்துள்ளது. இதற்காக மின் ஏல நடைமுறைக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இது வெளிப்படையான போட்டியை ஊக்குவிக்கும் என பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இருப்பினும் அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் வயல்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவிற்கான விலை நிர்ணயம் அப்படியே தொடரும் என அமைச்சர் கூறினார்.
மேலும் இந்த சீர்திருத்தங்கள், இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் பயன்பாடு அதிகரித்தால் சுற்றுசூழல் மேம்படும். எரிவாயு துறையில் வேலைவாய்ப்பு மற்றும் சிறு தொழில் வாய்ப்பை உருவாக்கும் என்கின்றனர்.