மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர நாளில் அரசால் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சதய விழா கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த 2 நாட்களுக்கும் தஞ்சாவூர் மாநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இந்தாண்டு ராஜராஜ சோழன் 1035-வது சதய விழா வரும் அக்.26-ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனோ காரணமாக விழாவை எளிமையாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வழக்கமாக நடக்கும் பந்தல்கால் முகூர்த்தம் எதுவும் இல்லாமல், வாராஹி அம்மனுக்கு நேற்று பால், சந்தனம், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. அக்.26-ம் தேதி வரை கோயிலில் சிறப்பு பூஜைகள் மட்டுமே நடக்கும் என கோயில் பணியாளர்கள் கூறினர்.