ஊத்தங்கரையில், தீயில் கருகிய கணவன், மனைவிக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வீரமணி நகரை சேர்ந்தவர் பிரபு, 27; திருப்பத்தூரில் தனியார் வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்; இவரது மனைவி விஜயலட்சுமி, 26; நேற்று முன்தினம் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது உடையில் தீப்பிடித்தது. அவரை, பிரபு காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரது உடலிலும், தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.