சர்வதேச சேமிப்பு தினம்: சேமிப்பே இல்லாத இந்தியர்கள்!

இந்தியாவில் பெரும்பாலானோர் எதிர்கால நலனுக்காக சேமிப்பதே இல்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

பணத்தை வைத்து நம்மால் அனைத்தையும் வாங்கிவிட முடியாது. ஆனால், நமது சுகத்துக்கு பணம் மிக அவசியமான ஒன்றாகும். பணத்தைச் சம்பாதிப்பதை விட அதைச் சேமிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு செய்துவிட்டு எதிர்காலத்தில் அவசரத் தேவைக்கு ஒன்றும் இல்லாத நிலை ஏற்படாமல் இருக்க சேமிப்பு அவசியம். அதுவும் கொரோனா வந்த பிறகு சேமிப்பு மற்றும் அவசர காலத்துக்கான பணத் தேவை குறித்து பலர் புரிந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்தியர்கள் பலர் சேமிப்பில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 31ஆம் தேதி சர்வதேச சேமிப்பு தினத்தை முன்னிட்டு ஸ்கிரிப் பாக்ஸ் நிறுவனம் சார்பாக ஆன்லைன் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ‘வெல்த் & வெல் பீயிங்’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஆண், பெண் உட்பட மொத்தம் 630 பேர் பங்கேற்றனர். 25 முதல் 55 வயது வரை உள்ள நபர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தினர் கொரோனா போன்ற இக்கட்டான சமயத்தில் கடுமையான பண நெருக்கடியைச் சந்தித்ததாகக் கூறியுள்ளனர். நிதி சார்ந்த முன்கூட்டிய திட்டமிடலில் இருப்பதாக 42 சதவீதத்தினரும், சொத்து உருவாக்கத்தில் முதலீடு செய்து வருவதாக 23 சதவீதத்தினரும் கூறினர்.

ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் தங்களது சம்பளப் பணத்தில் 0 முதல் 20 சதவீதம் வரையில் சேமிப்பதாகக் கூறியுள்ளனர். 20 முதல் 30 சதவீதம் வரையில் சேமிப்பதாக 20 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். ஆண் – பெண் ஒப்பீட்டில் பார்த்தால் பெரும்பாலான ஆண்கள் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வதாகக் கூறியுள்ளனர். 35 வயதுக்குக் குறைவான பலர் தங்களது சம்பளப் பணத்தில் பெரும் தொகையை தங்களது வங்கிக் கணக்கிலேயே வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். அதேநேரம், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அந்தப் பணத்தை முதலீடு போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here