மருத்துவப் படிப்பில் முறைகேடு

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கும் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் இடையே சதி திட்டம் இருந்ததா என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி.,விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.அரவிந்த் தாக்கல் செய்த மனுவில் ‘முதுநிலை மருத்துவப் படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்தாமல் மாணவர்கள் சேர்க்கையை முடிக்கக் கூடாது.’இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்க்கையை முடிக்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. டாக்டர் கீதாஞ்சலி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,கவுன்சிலிங் அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அவகாசம் நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.’நீட்’ தேர்வில் தன்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தனியார் கல்லுாரியில் இடம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும் என மாணவி சார்பில் வழக்கறிஞர் தங்கசிவன் முறையிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:மருத்துவப் படிப்பில் தகுதி குறைந்தவர்களை சேர்ப்பதற்கு அரசு எப்போதும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது. ஏனென்றால் மருத்துவப் படிப்பு மனித உயிர் சம்பந்தப்பட்டது.எனவே தான் மருத்துவ படிப்புகளில் தகுதியை மட்டுமே அளவுகோலாக உச்ச நீதிமன்றம் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது.இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின் தான் கடைசி கட்ட கவுன்சிலிங் நடத்த அவகாசத்தை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தை அரசு அணுகியது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடத்துவதற்கு அரசுக்கு தடையும் இல்லை.

ஆனால் அதை அரசு மேற்கொள்ளவில்லை. அதனால் 74 இடங்கள் தனியார் கல்லுாரிகளுக்கு விட்டு கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை கல்லுாரிகள் நிரப்பி கொண்டன.’ரெகுலர்’ கவுன்சிலிங்கில் இடம் கிடைக்க தகுதி பெறாதவர்கள் தனியார் கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தனியார் கல்லுாரிகளுக்கு ஆக. 30ம் தேதி இறுதி பட்டியலை தேர்வுக் குழு அளித்துள்ளது.

அதில் மாணவர்களின் தொடர்பு விபரங்கள் இல்லை.அப்படி இருக்கும்போது எப்படி இந்த மாணவர்களை பிடித்து 31ம் தேதி அவர்களுக்கு இடங்களை ஒதுக்கியது என்ற கேள்வி எழுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வழிமுறையை கண்டுபிடித்து தனியார் கல்லுாரிகள் இடங்களை நிரப்புகின்றன. இத்தகைய சூழ்நிலை தொடர அனுமதித்தால் தகுதியுள்ள மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும்.பண வசதி உள்ள மாணவன் இடங்களை வாங்கி மற்ற மாணவர்களுடன் மருத்துப் படிப்பை படிக்க முடியும்.இப்படிப்பட்ட முறையில் இடம்பெறும் மாணவன் இந்த சமூகத்துக்கு பெரிதும் ஆபத்தானவன்.எப்படியாவது படிப்பை முடித்து அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவான்.இந்த கல்வியாண்டில் வைரஸ் தொற்றை சாதகமாக்கி தகுதி குறைவானவர்களை வைத்து 74 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.இதில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும்,தனியார் கல்லுாரிகளுக்கும் இடையே சதி இருப்பது தெரிகிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.விசாரணையில் தான் சதியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்; மாணவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பது தெரிய வரும்.தனியார் கல்லுாரிகள் அறக்கட்டளை நடத்தவில்லை. இந்த மாணவர்கள் சேர்க்கை வாயிலாக அவர்கள் லாபம் அடைந்திருப்பர்.

சட்டவிரோத நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ளாது என்ற வலுவான செய்தியை தெரிவிக்க நீதிமன்றங்கள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்படுகிறது. உதவி ஆணையர் தலைமையில் குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். ஆக. 31ல் காலியிடங்களை நிரப்புவதில் மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரிகளுக்கும் தனியார் கல்லுாரிகளுக்கும் இடையே சதி நடந்ததா; ஒவ்வொரு மாணவரிடம் இருந்து பெறப்பட்ட தொகை பற்றி விசாரிக்க வேண்டும்.ஜன. 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here