‘அமெரிக்காவைச் சேர்ந்த ‘தேவாஸ் மல்டிமீடியா’ நிறுவனத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வர்த்தக பிரிவான ‘ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற செயற்கைகோள் தயாரிப்பு நிறுவனம் 9000கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வர்த்தக பிரிவாக ‘ஆன்ட்ரிக்ஸ்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் வெளிநாடுகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான செயற்கைகோள்களை தயாரிப்பது அதை இஸ்ரோ ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவுவது உள்ளிட்ட பணிகளை செய்து தருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த ‘தேவாஸ் மல்டிமீடியா’ என்ற நிறுவனம் கர்நாடகாவின் பெங்களூருவில் தங்கள் புதிய நிறுவனத்தை துவங்கியது.அந்நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்காக இரண்டு செயற்கைகோளை தயாரிக்கவும் அதை விண்ணில் ஏவி செயல்படுத்தி தரவும் இஸ்ரோவின் ‘ஆன்ட்ரிக்ஸ்’ நிறுவனத்துடன் 2005ல் ஒப்பந்தம் போட்டது.
இந்த இரு செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவ ‘ஆன்ட்ரிக்ஸ்’ ஒப்புக்கொண்டது.இந்நிலையில் 2011 பிப்ரவரியில் இந்த ஒப்பந்தத்தை ‘ஆன்ட்ரிக்ஸ்’ நிறுவனம் திடீரென ரத்து செய்தது. இது தொடர்பாக ‘தேவாஸ் மல்டிமீடியா’ உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதை மத்தியஸ்த குழுவுக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து அமெரிக்காவின் சியாட்டலில் உள்ள வாஷிங்டன் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ‘தேவாஸ் மல்டிமீடியா’ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் ‘அமெரிக்க நிறுவனமான ‘தேவாஸ் மல்டிமீடியா’வுக்கு இஸ்ரோவின் ‘ஆன்ட்ரிக்ஸ்’ நிறுவனம் வட்டியுடன் சேர்த்து 9000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.