எலி மருந்தை சாப்பிட்டு தாய் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாப்பா ஊரணி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 50). இவருடைய மனைவி தீபா (46) இவர்களுக்கு பிரியதர்ஷினி (24) மஹிமா (21) ஆகிய 2 மகள்கள். இவர்கள் இருவரும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர்.

தீபாவின் கணவர் லட்சுமணன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் காரைக்குடி திரும்பினார். பின்னர் லட்சுமணன் தனது மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென்று லட்சுமணன் மாரடைப்பால் இறந்தார். இதனால் தீபாவும், அவர்களது மகள்களும் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர். உறவினர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தீபா, “தனது 2 மகள்களையும் அழைத்து, உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து எப்படி திருமணம் முடித்து வைக்க போறேன் என்றே தெரியவில்லை. ஆதலால் நாம் 3 பேரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார். மகள்களும் தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறார்கள். இதையடுத்து 3 பேரும் எலிக்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு உள்ளனர். சிறிது நேரத்தில் 3 பேரும் வாந்தி எடுத்து உள்ளனர். இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து, 3 பேரையும் ஆம்புலன்சில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் தீபா பரிதாபமாக இறந்தார். அவருடைய மகள்களான பிரியதர்ஷினி, மஹிமா ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here