கிள்ளான்: மிகவும் பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றானதும் வைணவ திருப்பதி என்று புகழ் பெற்றதும் மலேசியாவின் முதல் கருங்கல் ஆலயமுமான கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயம் நாளை (10.11.2020) செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என்று ஆலயத்தலைவர் சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.
மேலும் நாளை தொடங்கி ஆலயத்தில் 48 நாட்களுக்கு காலை – மாலை இரு வேளைகளிலும் சனிப்பெயர்ச்சி மகா யாகம் நடைபெறும். 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று அவர் கூறினார்.
சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் ஜனவரி 24ஆம் தேதியும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 26ஆம் தேதியும் பெயர்ச்சி ஆக உள்ளனர்.
நவக்கிரகங்கள் 9 இல் குருப் பெயர்ச்சியும் சனிப் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும். அந்த வகையில் வரும் 15ஆம் தேதி நடைபெறும் குருப் பெயர்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் அன்றைய தினம் மகா யாகம் நடைபெறவிருக்கிறது.
அதனால் பக்தர்கள் நாளை தொடங்கி ஆலயத்திற்கு வந்து எம்பெருமானின் அருளை பெற்றுய்யுமாறு கேட்டும் கொள்ளப்படுகின்றனர்.