ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்கள் கொரோனா தொற்றில் சிக்கியதால் ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.
இந்த நிலையில் படப்பிடிப்பை இனிமேலும் தள்ளி வைக்க வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்து மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.