புதுடெல்லி:
கால்பந்தின் மேஸ்ட்ரோவான மராடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மராடோனா தனது வாழ்நாள் முழுவதும் கால்பந்து களத்தில் சில சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு கொடுத்ததாகவும், அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும், அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணியின் கேப்டனாக இருந்த மராடோனா, உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்.
அவர் 4 உலக கோப்பை போட்டியில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்று அர்ஜெண்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடியிருக்கிறார்.