அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்

ஜனவரியில் கட்சி தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த் இன்று பெங்களூரில் இருக்கும் தனது அண்ணன் சத்ய நாராயணாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் ரஜினிகாந்த்.

2017 ஆம் ஆண்டில் இருந்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஒரு முடிவு தெரிந்து விட்டது.

 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இரு நாட்கள் ஆலோசனை நடத்திய நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதம்தான் கட்சி தொடங்கவிருப்பதாகவும் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வரும் 31 ஆம் தேதி வெளியிடுவதாகவும் அறிவித்தார்.

அதன் படி, தற்போது ரஜினி தனது கட்சிப் பணிகளை தீவிப்படுத்தி இருப்பதாகவும் கட்சியின் மேற்பார்வையாளர்,  தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழருவி மணியனுக்கும் அர்ஜுன மூர்த்திக்கும் சிறப்பு அதிகாரங்களை வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், பெங்களூரு சென்ற ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்ய நாராயணாவைச் சந்தித்து ஆசி பெற்றார். அவர் 14 ஆம் தேதி வரை பெங்களூரில் தங்கி இருக்கப் போவதாகவும் கட்சி தொடர்பாக தனது நண்பர்கள், முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளையும் பெங்களூரிலேயே தனது அண்ணனுடன் கொண்டாடவிருப்பதாகவும் தெரிகிறது. அதன் பின்னர், 15 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படம் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here