மாட்ரிட்:
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தும் வேலை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு உயிரிழங்களுக்கும் பரவுவது சமீபத்தில் தெரியவந்தது. வைரஸ் வளர்சிதை மாற்றமடைந்து மனிதர்களிடமிருந்து பல்வேறு உயிரினங்களுக்கும் பரவும் நிகழ்வு வைரஸ் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.
மனிதர்கள் மட்டுமல்லாமல் புலி, நாய், பூனை, கீரி ஆகிய உயிரினங்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த வரிசையில் தற்போது சிங்கமும் இணைந்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள ஹட்டலன் உயிரியல் பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 16 வயது நிரம்பிய 3 பெண் சிங்கங்களுக்கும் 4 வயது நிரம்பிய 1 ஆண் சிங்கத்திற்கும் கொரோனா பரவியுள்ளது தெரியவந்தது.
சிங்கங்கள் மூச்சுவிடுவதில் சிரமப்படுவதை கண்ட உயிரியல் பூங்கா கண்காணிப்பாளர் சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அந்த பரிசோதனையில் சிங்கங்களுக்கு வைரஸ் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சிங்கங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக விலங்குகள் நல அமைப்பிடமும் தகவல் கொடுக்கப்பட்டு
தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.