இறைவனின் தாயான கன்னி மரியாளின் பிறப்பைக் கொண்டாடும் இந்த விழா செப்டம்பர் 8-ஆம்தேதி சிறப்பிக்கப்படுகிறது. எருசலேம் நகரில் வாழ்ந்த யோவாக்கிம் – அன்னா ஆகியோரின் மகளாக மரியாள் பிறந்தது தொடர்பான நிகழ்வுகளை இந்த விழா நினைவூட்டுகிறது.
கி.பி.150ல் எழுதப்பட்ட ‘யாக்கோபின் முதல் நற்செய்தி’ என்ற நூல், மரியாளின் பிறப்பு, இளமைப் பருவம் பற்றியத் தகவல்களைத் தருகிறது. கன்னி மரியாள் செப்டம்பர் 8 ஆம்தேதி பிறந்தார் என ஆங்கர்ஸ் ஆயரான புனித மவுரில்லியுஸ் 425ஆம் ஆண்டு அறிவித்தார்.
இதையடுத்து, கன்னி மரியாளின் பிறப்பை விழாவாக கொண்டாடும் வழக்கம் தோன்றியது. 6ஆம் நூற்றாண்டில் எருசலேம் புனித அன்னா ஆலயம் கட்டப்பட்ட வேளையில், இந்த விழா கீழைத் திருச்சபை முழுவதற்கும் விரிவடைந்தது. 7ஆம் நூற்றாண்டில், ரோம் உள்பட பைசாந்திய பேரரசின் மேற்கத்தியப் பகுதிகளுக்கும் இந்த விழா பரவியது.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேத்து ஆயரான புனித ஆண்ட்ரூ, தமது மறையுரைகளில் மரியாளின் பிறப்பு விழா பற்றி குறிப்பிடுகிறார். 799ஆம் ஆண்டு கூடிய சால்ஸ்பர்க் சங்கத்தின் 10வது விதியில், செப்டம்பர் 8ந்தேதி மரியாளின் பிறப்பு விழா இடம் பெற்றுள்ளது.
13ஆம் நூற்றாண்டு முதல், கன்னி மரியாளின் பிறப்பு எண்கிழமையுடன் இணைந்த பெரிய விழாவாக கொண்டாடப்பட்டது. 1969ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்ட திருவழிபாட்டு நாள்காட்டி, இதை விழாக்களின் வரிசையில் சேர்த்துள்ளது. வேளாங்கண்ணியில் மரியன்னையின் காட்சிகள் செப்டம்பர் 8 ஆம்தேதி நிகழ்ந்ததன் காரணமாக, அங்கு இந்நாளில் திருவிழா கொண்டாடப்படுகிறது.