சேலம்-
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஒரே நாளில் 23 பேர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் வீராணம் நாராயணதாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (63). இவர் மனைவி பூங்கொடி, மகன்கள் ஸ்ரீதர், செல்வகுமார், மருமகள்கள் புஷ்பா, சத்யா, ஸ்ரீதரின் மகன்களான ஹரிஹரன், கைலாசம் ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார்.
நுழைவாயிலுக்கு வந்ததும், மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி அனைவரும் தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அவர்கள் கூறுகையில், ஊர் முக்கிய பிரமுகர், பஞ்சாயத்து தலைவர், சிலர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்டுத் தர வேண்டும் என்றனர்.
இதேபோல், சேலம் அயோத்தியாபட்டணம் அ.நாட்டாமங்கலத்தை சேர்ந்த 7 சிறுவர்கள், 8 பெண்கள் கலெக்டர் அலுவலகம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
அவர்கள் கூறுகையில், கடந்த மாதம் அரசின் விலையில்லா ஆட்டுக்கு அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கினர். முறைகேடுகளை நீக்கி எங்களை போன்ற தகுதியான பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.